மூச்சுத்திணறல், உடல்வலியால் துணிக்கடையில் வேலைபார்த்த பெண் திடீர் மரணம்

துணிக்கடையில் வேலைபார்த்த பெண் மூச்சுத்திணறல் காரணமாக இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

சென்னை பாடியில் பிரபல நிறுவனத்தின் துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள், ஆண்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவை சேர்ந்த சசிரேகா(23) என்ற இளம்பெண்ணும் அங்கு பணிபுரிந்து வந்தார். இவர், பாடி பாலாஜி நகரில் உள்ள துணிக்கடைக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சசிரேகாவுக்கு திடீரென உடல்வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திடீரென மயங்கி விழுந்த அவரை உடனடியாக தோழிகள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்ட அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மேலும் இதுகுறித்து சசிரேகாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை வந்த சசிரேகாவின் தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின்படி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் வலி மற்றும் மூச்சுத் திணறல் இருந்ததால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனால் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.