அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தில் திடீர் தீ விபத்து

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கனவே வர்த்தகப்போர் நிலவியது. இந்நிலையில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் காரணமாக இருநாடுகள் இடையே மேலும் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகம் சர்வதேச சட்ட விதிகளை மீறியதாக கூறி அந்த தூதரகத்தை உடனடியாக மூட டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது. இது நியாயப்படுத்த முடியாத நடவடிக்கை என அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனா இந்த தகவலை வெளியிட்ட சில மணி நேரத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீர் தீ விபத்து நேரிட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தூதரகத்தில் இருந்த பல முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக தகவல்கள் வெளியாகின.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த தீ விபத்தில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு விட்டதாக சீனா குற்றம் சாட்டிய சில மணி நேரத்துக்குள் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பலரும் சந்தேகம் அடைந்துள்ளனர்.