விவசாய பயன்பாட்டிற்காக சீனாவால் வழங்கப்பட்ட டீசல் விநியோகம்

கொழும்பு: நாளை முதல் விநியோகம்... நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லிட்டர் டீசல் நாளை (09) முதல் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சீன அரசாங்கம் இதனை வழங்கியது.

இவ்வாறு வழங்கப்பட்ட 10.06 மில்லியன் லிட்டர் டீசலில் 6.98 மில்லியன் லிட்டர் டீசல் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டு மீதமுள்ளவை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.