தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்


தமிழகம்: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்து தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் மாணவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக உயர்கல்வி பயில கல்வி நிறுவனங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில், பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்ட செய்தி குறிப்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், வடசென்னை மற்றும் ஆர்.கே.நகர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பொறியியல் படிப்புகளுக்கும் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான தகுதிகளாக மாணவர்கள் 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சிகளில் சேர ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 எனவும், பெண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி உதவித்தொகை மாதந்தோறும் ரூ. 750 வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி போன்றவை வழங்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் பயிற்சியின்போது இன்டர்ன்ஷிப் டிரையினிங் மற்றும் இன்பிளான்ட் டிரையினிங் மூலம் தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் பயிற்சி முடிந்ததும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியான www.skilltraining.tn.gov.in என்பதில் ஜூலை 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 – 29813781 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது அருகில் இருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.