புயலுக்கு பின்னர் சகஜ நிலைக்கு மெல்ல, மெல்ல திரும்பும் தமிழகம்

நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் நேற்று அதிகாலையில் புதுச்சேரி- மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. மக்களை அச்சுறுத்தி வந்த 'நிவர்' புயல், கரையை கடந்த போது தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர்ச் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.

புயல் கரையைக் கடந்ததும் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக மின் வினியோகம் நிறுத்தப்பட்ட பெரும்பாலான பகுதிகளில், மின் வினியோகம் சீரடைந்தது. புயல் கரையைக் கடந்ததும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. இன்று முதல் புறநகர் சிறப்பு ரயில்களும் ஓடத் தொடங்கியுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்தைக் கண்காணித்து அதற்கேற்ப உபரிநீர் திறக்கப்பட்டதால் வெள்ள அபாயம் ஏற்படவில்லை. இதனால், அடையாறு கரையோர மக்கள் நிம்மதி அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.