தமிழகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

தமிழகம்: தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறியது. இதனால் மக்கள் அன்றாட உணவுக்கு காய்கறிகளை வாங்க முடியாமல் பெரிதும் தவித்தனர். குறிப்பாக தக்காளியின் விலை ரூ.100 ஐ தாண்டியது.

இதனால் சாமானிய மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் அரசு ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய முன் வந்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை மறுபடியும் இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தோட்டக்கலை துறை இயக்குநரகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் காய்கறி சாகுபடியினை அதிகப்படுத்திட தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் கிராமங்களுக்கு சென்று காய்கறிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். , உழவர் சந்தைகள் விற்பனை மையமாக மட்டுமின்றி, உழவர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பத் தகவல் பரிமாறும் மையமாக செயல்படுவது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.

விவசாயிகளின் நலனுக்காக, உழவர் சந்தைகளில் மாதமிருமுறை விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் பயிற்சி நடத்தபட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளில் மின்னணு தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் படிப்படியாக இந்த வசதி அனைத்து உழவர் சந்தைகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.