பொங்கல் பண்டிகையொட்டி 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படை எடுத்து செல்வர். இதையடுத்து பொது மக்களின் பயணத்தை சுலபமாக்கும் வகையில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஆண்டுதோறும் இயக்கப்பட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் அதிகளவில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர் என்பதால் 12ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் ஆலோசித்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது பற்றி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மட்டும் 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என தெரிவிக்கக்ப்பட்டுள்ளன.