தமிழக பள்ளி மாணவர்கள் இவற்றை காண்பித்து மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

தமிழகம் : தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக போக்குவரத்துக்கழக நிர்வாக மேலாண் இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்படி அந்த கடிதத்தில், 2022-23 கல்வியாண்டில் மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விவரங்கள் சேகரித்து அச்சடித்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

அதேபோல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டிட கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி (மாமல்லபுரம்), அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் ஆகியோர் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை 2019-20ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை பயணிக்கலாம்.

மேலும் மாநகர போக்குவரத்துக் கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை, 2019-20ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கும்படி மீண்டும் உத்தரவிடப்படுகிறது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.