வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

கொரோனா அச்சுறுத்தலால் விமான சேவை நிறுத்தப்பட்டதால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கையர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 8ம் திகதி சனிக்கிழமை தொடக்கம் இப்பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொழபகே தெரிவித்தார்.

எதிர்வரும் 8ம் திகதி துபாய் நாட்டில் இருந்து 600 இலங்கை பிரஜைகள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளார்கள். அத்துடன் மாலைத்தீவு, அவுஸ்ரேலியா, கட்டார், ஓமான், பஹ்ரைன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வசித்த இலங்கையர்கள் நாட்டுக்கு தொடர்ச்சியாக அழைத்து வரப்பட உள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தரப்பினர் அதிகளவில் ஈடுப்படுத்தப்படவுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களை மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இடைக்காலத்திற்கு பயணிகளை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.