லெபனான் சிறையிலிருந்து 69 கைதிகள் தப்பியோடியதால் பரபரப்பு

கைதிகள் தப்பியோட்டம்... லெபனான் சிறையிலிருந்து 69 கைதிகள் தப்பியோடினா். அப்போது ஏற்பட்ட காா் விபத்தில் 5 கைதிகள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியான பாப்டாவில் அமைந்துள்ள சிறையிலிருந்து 69 கைதிகள் நேற்று தப்பியோடினா்.

அவா்களில் 5 போ் ஒரு காரைத் திருடி அதன் மூலம் தப்பிச் சென்ற போது, அவா்களை போலீஸாா் துரத்திச் சென்றனா். அப்போது கைதிகள் தப்பிச் சென்ற காா் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கைதிகள் அனைவரும் உயிரிழந்தனா்.

சிறையிலிருந்து தப்பிச் சென்ற மேலும் 15 கைதிகளை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா். 4 கைதிகள் தாங்களாகவே திரும்பி வந்து போலீஸாரிடம் சரணடைந்தனா். சம்பவப் பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்புப் படையினா், தப்பியோடிய எஞ்சிய கைதிகளை தேடி வருகின்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.