கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையிலும் கூட பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் வழக்கம்போல் இன்று இயங்கிக்கொண்டிருந்தது.

பங்குச்சந்தை அலுவலகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள், மெயின் கேட்டில் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். அதன்பின் துப்பாக்கியால் சுட்டபடியே அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்தனர். இதற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகள் சுட்டதில், பொதுமக்கள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். ஒரு பயங்கரவாதி மட்டும் பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்து பதுங்கிக் கொண்டான்.

அதன்பின், அலுவலக பணியாளர்கள் அனைவரையும் போலீசார் வெளியேற்றி விட்டு, அப்பகுதி முழுவதையும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பின்னர் பயங்கரவாதி சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டான். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.