ரஷ்யாவில் 13 வயதில் கர்ப்பமான சிறுமிக்கு குழந்தை பிறந்தது

13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது... 13 வயதில் கர்ப்பமானதை இணையத்தளத்தில் பகிர்ந்து பிரபலமான ரஷ்யாவின் பாடசாலை மாணி தர்யா சுட்னிஷ்னிகோவா பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

சில வாரங்களின் முன்னர் தர்யா சுட்னிஷ்னிகோவா தனது சக ஊடகத்தில் தனது கர்ப்பத்தை அறிவித்தார். 13 வயது பாடசாலை மாணவி கர்ப்பமாகி, அதை பகிரங்கமாக அறிவிக்கிறார் என்பதே விவகாரமான விடயம். அதைவிட விவகாரமானது, குழந்தையின் தந்தையென அவர் அறிவித்தது- 10 வயதான இன்னொரு மாணவனை.

10 வயது மாணவனும், தானும் நிற்கும் புகைப்படத்தையும் அந்த மாணவி வெளியிட்டிருந்தார். இதையடுத்து இணையத்தில் அவர் வைரலாகினார். சில வாரங்களில் அவரை 350,000 பேர் பின்தொடர தொடங்கினார்கள். இப்பொழுது சமூக ஊடகத்தில் தனது குழந்தை பற்றிய தகவலையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, ரஷ்ய தொலைக்காட்சியொன்றில் தோன்றி 10 வயதான இவான் என்பவரே குழந்தையின் தந்தையென குறிப்பிட்டார். எனினும், பின்னர் அவர் தனது சொந்த ஊரான ஜெலெஸ்னோ கோர்க்ஸில் 16 வயது சிறுவனால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. இதன்மூலமே அவர் கர்ப்பந்தரித்தார்.

சிறுமி பின்னர் அதை ஏற்றுக்கொண்டதுடன், பலாத்காரத்தால் கர்ப்பந்தரித்த விடயத்தை பகிரங்கமாக சொல்ல வெட்கப்பட்டதாக தெரிவித்தார். விடயம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, தன்னை பலாத்காரம் செய்தவர் பற்றிய விடயங்களையும் பகிரங்கப்படுத்தினார்.

எனினும், பொலிசாரின் அறிவுறுத்தலின்படி அதை உடனே அகற்றினார். “குற்றவியல் விசாரணை நடப்பதால் அந்த தகவல்களை நீக்கியுள்ளேன்“ என்றும் பதிவிட்டார். பிரசவித்த குழந்தையின் டிஎன்ஏ மாதிரியை பெற்று, இந்த வழக்கில் மேலதிக விசாரணையை செய்யவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரசவத்தின்போது, 10 வயதான இவான் கூட இருக்க அனுமதிக்கப்படவில்லை. பிரசவத்திற்கு சற்று முன்னர் சிறுமி பகிர்ந்த தகவலில், “அவர் என்னுடன் வாழவில்லை. சில இரவுகளில் ஒன்றாக தங்கியுள்ளார். 16 வயதில் தந்தை பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார். ஆனால், அப்போது நமக்குள் எப்படியிருக்கிறது என்பதை பொறுத்தது அது“ என தெரிவித்துள்ளார்.