பல்லாரியில் கொரோனாவுக்கு பலியான 8 பேரின் உடல்களை ஒரே குழிக்குள் போட்டு புதைத்த அவலம்

கர்நாடகத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக பல்லாரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்தனர். கடந்த 28-ந் தேதி 4 பேர் பலியாகினர். அதன்படி, பல்லாரியில் மட்டும் மொத்தம் 23 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடலை தரதரவென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் இழுத்து குழிக்குள் வீசும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இறந்தவர்களின் உடல்களை மனிதாபிமானம் இல்லாமல் தரதரவென்று இழுத்து வந்து குழிக்குள் வீசும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல்களை ஊழியர்கள் கடைப்பிடிக்கவில்லை என தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து பல்லாரி மாவட்ட கலெக்டர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். உடல்களை அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வராததால், ஊழியர்கள் இதுபோன்று ஒரே குழிக்குள் 8 பேரின் உடல்களை போட்டு புதைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கூறுகையில், பல்லாரியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி பலியானவர்களை ஒரே குழிக்குள் வைத்து புதைத்தது தொடர்பாக என்னுடைய கவனத்திற்கு வரவில்லை. அதுபோன்று நடந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வேலை அப்படி நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.