புதுடெல்லியில் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் மத்திய அரசு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லைகளிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தினால் டெல்லியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று 2-ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி இன்று டெல்லி விக்யான் பவனில் பேச்சுவார்த்தை தொடங்கியது. வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த 40 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.