பிரம்மபுத்திரா நீரோட்டம் மேலும் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், நீரில் மிதந்து வருகிறது, அஸ்ஸாம் மாநிலம். நாளை மாலைக்குள் பிரம்மபுத்திரா ஆற்றின் நீரோட்டம் மேலும் 18 செ.மீ அளவுக்கு உயரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய நீர் வள ஆணையம்.
அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 110 பேர் இறந்துள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். .
வெள்ளத்தில் சிக்கிய மனிதர்கள் மட்டுமல்லாமல் வன விலங்குகளும் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளன. காசிரங்கா தேசிய பூங்காவின் 85 சதவிகிதத்துக்கும்
அதிகமான பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி
நூற்றுக்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் இறந்துள்ளன. காசிரங்கா தேசிய
பூங்காவின் அடையாளமாகக் கருதப்படும் ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களில்
எட்டு பலியாகியிருக்கின்றன.
வனத்தில் இருந்து தப்பிய வனவிலங்குகள்
பலவும் சாலைகளில் சுற்றித் திரிவதோடு, ஊருக்குள் தஞ்சமடைந்துள்ளன. இதுவரை
ஒரு லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளப்பெருக்கு
குறித்து மத்திய நீர் ஆணையம், “பிரம்மபுத்திரா நதி நீர் பிடிப்பு பகுதியில்
இன்னும் மழைபெய்து வருவதால் மேலும் நீர் வரத்து அதிகமாகும். இன்று
காலையுடன் ஒப்பிடுகையில் நதியின் நீரோட்டம் இன்று (21ம் தேதி) மாலைக்குள்
மேலும் 18ெ.மீ அளவுக்கு உயரும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரம்மபுத்திரா
நதியில் ஆண்டு தோறும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
வெள்ளப்பெருக்கின்போது 1055 சதுர கி.மீ அளவுக்கு காசிரங்கா தேசிய பூங்கா
நீரில் மூழ்குவது வழக்கம். பிரம்மபுத்திராவும், அதன் துணை நதிகளும்
கொண்டுவரும் வண்டல் மண் தான் இந்தப் பகுதியைச் செழிப்புடன்
வைத்திருக்கிறது.
மத்திய வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு
அதிகாரி சதின் பர்மான் கூறுகையில் “இதற்கு முன்பு காசிரங்காவில்
பத்துவருடங்களுக்கு ஒருமுறைதான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால், இப்போது
அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. பருவநிலை
மாற்றத்தால் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதைக் கணிப்பதும்
சவாலாகவே இருக்கிறது” என்று கூறியுள்ளார் .
2016- 2020 ஆண்டுகளில்
2018 - ம் ஆண்டு தவிர, தொடர்ச்சியாக பிரம்மபுத்திரா நதியில் அதிகளவு
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காசிரங்காவில் வன விலங்குகள் இயற்கையாகவே
வெள்ளத்தை எதிர்த்துப் போராடி, மேடான இடங்களுக்குச் சென்று பிழைத்து
கொள்கின்றன. வயதான, பலவீனமான விலங்குகளே இறக்கின்றன. ஆனால்,
மனிதர்களுக்குத் தான் இந்த வெள்ளப்பெருக்கு பெருமளவுக்கு இழப்பை
ஏற்படுத்திவிடுகிறது. வீடுகள் இடிந்து, உடைமைளை இழக்கும் சூழல்
ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கொரொனா நோய்த் தொற்றால் அஸ்ஸாம் மாநில
அரசு கடுமையாகத் திணறி வருகிறது. இந்த நிலையில் ஏற்பட்டுள்ள
வெள்ளப்பெருக்கு மேலும் சூழலைக் கடுமையாக்கியிருக்கிறது