பணியின் போது காலமான காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை .. பணி ஆணை முதல்வர் இன்று வழங்கல்

சென்னை: பொதுவாக அரசு பணியாளர்கள் பணிக்காலம் முடிவடைவதற்குள் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அந்த பணியிடம் வழங்கப்படும். அதன்படி வரவேற்பாளர்கள் பணியிடத்திற்காக பணியின் போது மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து இது தொடர்பாக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக இன்று பணியின் போது காலமான காவலர்களின் வாரிசுகளுக்கு “காவல் நிலையத்தில் வரவேற்பாளர்கள்” பணியிடத்திற்கான பணி ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார்.

மேலும் அத்துடன் தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 457 ஆண்கள் மற்றும் 455 பெண்கள் என்று மொத்தமாக 912 வாரிசுதாரர்களுக்கு பணியிடத்திற்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் காவல்நிலையங்கள் மற்றும் ரயில்வே காவல் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது. இவர்கள் மூலமாக பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு உடனடியாக குறைகள் தீர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.