ராமநாதபுரத்தில் நடக்க உள்ள மீனவர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்பு

ராமநாதபுரம்: மீனவர்கள் மாநாடு… தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, தாக்கப்படுவதை கண்டித்தும், அதனை தடுக்க வலியுறுத்தியும் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கும் மீனவர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர் சங்க பிரதிநிதிகள் விடுத்திருந்த அழைப்பை ஏற்று மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்க இசைவு தெரிவித்து இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கை கடற்படையினரால் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப்படகுகளை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.