சட்டமன்ற தேர்தலையொட்டி எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் இன்று பிரச்சாரம்

வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், பூத் கமிட்டி அமைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். மேலும், தமிழக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்று நிர்வாகிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- 2021 சட்டசபை தேர்தலையொட்டி எனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நாளை(இன்று) முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். ஏனென்றால், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் குறைவாக உள்ளது.

மேலும், தமிழக சட்டசபை தேர்தலில் நிறைய இடங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளதால் அடிக்கடி இங்கு வரமுடியாது. இதனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளின்படி எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகையில் சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.