தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில், கொரோனா பரவல் காரணமாக விஜயகாந்த் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

இதனிடையே, தேமுதிகவின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

இந்நிலையில், அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.