துனிசியாவில் புலம்பெயர்தோர் சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடி தங்கள் நாடுகளை விட்டு ஐரோப்பியா நோக்கி அகதிகளாக சட்டவிரோதமாக புலம்பெயர்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இவர்கள் ஆபத்து நிறைந்த மத்திய தரைக்கடல்வழி பயணங்கள் மேற்கொள்கின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்து ஏற்படுகின்றன. மேலும் மரணங்களுக்கும் நிகழ்கின்றன.

ஆபத்து நிறைந்த கடல்வழி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்ட போதிலும் பலர் அதனை கவனத்தில் கொள்வதில்லை. இந்நிலையில், ஆப்பிரிக்காவின் பல நாடுகளை சேர்ந்த 30-க்கும் அதிகமானோர் சிறு படகு ஒன்றில் கடந்த திங்கட்கிழமை புறப்பட்டு மத்திய தரைக்கடல்வழி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

துனிஷிய நாட்டின் கடற்பரப்பில் உள்ள ஸ்பாக்ஸ் நகரில் இருந்து சற்று தொலைவில் வந்த அந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்தவர்களில் பலர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணியின் போது 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் நீரில் மூழ்கி ஏற்கனவே 11 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது மேலும் 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், துனிசியாவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலரது நிலைமை என்ன ஆனது என்று தெரியாததால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.