ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது

ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாது. ஈரானின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி 11:00 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து ரிக்டர் அளவுகளில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 முறையே நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து சேதமாகின.


இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என கூறப்படும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்தாண்டு ஜூன் மாதம், 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து காணப்பட்டனர். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.