அதிவேகமாக பரவும் கொரோனா...கடந்த, 10 நாட்களில், மஹாராஷ்டிரா, டில்லி, தமிழகம், ஹரியானா, மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில், கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
டில்லியில், தினமும், 1,300 பேர் வைரசால் பாதிக்கப்படுகின்றனர். நாட்டில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மஹாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் உள்ள தமிழகத்தில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக, 1,800ஐ கடந்து காணப்படுகிறது.
ஹரியானாவில், பாதிப்பு எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல் ஜம்மு - காஷ்மீரில் இரட்டிப்பாகி உள்ளதும் தெரியவந்துள்ளது.
தேசிய அளவில், உள்ள இறப்பு விகிதத்தை விட, 13 மாநிலங்களிலிருக்கும், 69 மாவட்டங்களில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. தேசிய அளவில், இறப்பு விகிதம், 2.90 சதவீதமாக உள்ளது. மே, 18ம் தேதி முதல், 69 மாவட்டங்களில், இறப்பு விகிதம், 5 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது, மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 8,498 ஆக உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.