நாடாளுமன்ற பேரவை முதலாவது கூட்டம் சபாநாயகர் இல்லத்தில் நடந்தது

நாடாளுமன்ற பேரவை கூட்டம்... 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையின் முதலாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியுமான நீல் இத்தவெல ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிற்பகல் 4.00 மணி முதல் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இக்கூட்டத்தில் முதலாவதாக கருத்து தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற பேரவையின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்றத்துடன், எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் அழைப்பு விடுத்தார்.

அதனையடுத்து, சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவால் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு அமைய நாடாளுமன்ற பேரவையின் சட்டரீதியான கட்டமைப்பு மற்றும் அதன் நடைமுறைகள் என்பன விளக்கமளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அதன் உறுப்பினர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கத்துக்கு வந்தனர். இதனையடுத்து, எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பேரவை மீண்டும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.