குழந்தைகள் மீது கத்திக்குத்து... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ்: பிரான்சில் உள்ள பூங்காவில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் குத்திய மர்மநபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் காயமடைந்த குழந்தைகளை நேரில் தனது மனைவியுடன் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.

அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தார். திடீரென அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை கத்தியால் குத்தத் தொடங்கினார். கத்தியால் குத்தப்பட்ட குழந்தைகள் வலியால் அலறினர். இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். அவர்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்கள் உள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தேக நபரை கைது செய்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.