கொரோனாவை வெற்றி கொண்டதன் அடையாளமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதாக கருத்து

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 23-ந்தேதி முடிவடைந்த நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 14-ந்தேதி தொடங்கி, அக்டோபர் 1-ந்தேதி முடிவடைகிறது. சீனாவுடன் ஒரு தடவையும், பாகிஸ்தானுடன் 2 தடவையும் போர் நடந்த சமயங்களிலும், பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் பாராளுமன்றம் வழக்கம்போல் செயல்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்காக பாராளுமன்றம் கூடும் தேதி தாமதமானது. தற்போது, 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தன. சமூக இடைவெளியுடன் இந்த கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. கொரோனாவுக்கு பயப்படாமல், அதை வெற்றி கொண்டதன் அடையாளமாக இந்த கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1962-ம் ஆண்டு சீனாவுடன் போர் மூண்டபோது, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கியது. கடந்த 1965-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் மூண்டபோது, மழைக்கால கூட்டத்தொடர் திடீரென முடித்துக்கொள்ளப்பட்டபோதிலும், ஒரு மாதத்துக்கு மேலாக கூட்டம் நடந்தது. 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் நடந்தபோது, பாராளுமன்றம் தடையின்றி நடந்தது.

1975-ம் ஆண்டு ஜூன் மாதம் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அது 1977-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை அது அமலில் இருந்தது. அந்த காலகட்டத்தில் 5 கூட்டத்தொடர்கள் நடத்தப்பட்டன. கேள்வி நேரம் மட்டும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் மந்திரிகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி கேட்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனாவுக்கு மத்தியில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.