படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

கேரளா: தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விபுல் ஷா தயாரித்து, சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் அதா ஷர்மா, சித்தினி இட்னானி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் இஸ்லாமிய பெண். அந்த பெண் மூலம் மற்றவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகிறார்கள் என்று டிரெய்லர் தெரிவிக்கிறது.

கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் ட்ரெய்லரில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்தப் படம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழகத்தில் ரிலீஸ் செய்தால் எதிர்ப்புகள் வரலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற ஐந்தாம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து முதலமைச்சர் பிணராயி விஜயன், “மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி தீவிரவாத அமைப்புகளில் சேர்வது போன்று இந்த படத்தில் கதை தளம் அமைக்கப்பட்டிருப்பதாக வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என உளவுத்துறை அலர்ட் கொடுத்துள்ளது.