தடுப்பூசி போடாதவர்கள் பட்டியல் ரெடி... தேடி வர்ற போறாங்க சுகாதாரத்துறையினர்

சென்னை: தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம் சுகாதாரத்துறை.

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது. இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்து வருகிறது.

நேற்று வரை ஒரு கோடியே 65 லட்சத்து 12 ஆயிரத்து 625 பேர் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் நிலுவையில் உள்ளனர். முதல் தவணையே போடாமல் 42 லட்சத்து 97 ஆயிரத்து 452 பேர் உள்ளனர். 2-வது தவணை ஒரு கோடியே 22 லட்சத்து 15 ஆயிரத்து 173 பேர் போடுவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி போடாமல் அதிகம் பேர் உள்ள மாவட்டமாக மதுரை உள்ளது. அங்கு 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் இதுவரையில் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

சென்னையில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரும், கன்னியாகுமரியில் 2 லட்சத்து 97 ஆயிரம் பேரும், திருப்பத்தூரில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 124 பேரும், ராணிப்பேட்டையில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 151 பேரும் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.