பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதை விட, மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வரும் 15-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் திறக்க மத்திய அரசு அறிவுறுத்தி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இருப்பினும் கல்வி நிறுவனங்களை திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளே இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சூழ்நிலை குறித்து சென்னையில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அவர் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி முடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் எடுப்பார். தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதை விடவும், மாணவர்களின் உயிர்தான் முக்கியம். கடந்த 7 மாதங்களாக மூடியிருக்கும் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளாட்சித் துறை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.