குறைந்த பயணிகளுடன் பஸ்களை இயக்கினால் நஷ்டம்தான்

குறைந்த அளவிலான பயணிகளுடன் பஸ்களை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 17-ந்தேதி ஊரடங்கு முடிவடையும் நிலையில் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் நிர்வாகம் இதற்கான செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து அனைத்து போக்குவரத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.


இது பற்றி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, போக்குவரத்து கழக பஸ்களை இயக்குவது குறித்து தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். அரசு அறிவிக்கும் விதிமுறைகளின்படி போக்குவரத்து கழக பஸ்களை இயக்க உரிய முன்ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

எனினும் தற்போது 50 சதவீத பயணிகளுடன் தான் பஸ்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்ற கருத்து இருக்கும் நிலையில் போக்குவரத்து கழகங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12-ல் இருந்து ரூ.16 வரை இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த இழப்பை சரிகட்டும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும்.

மாநில அரசு குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்காவது சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல் மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து அரசு பஸ்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். இதன் மூலமே போக்குவரத்து கழகங்கள் ஓரளவு நிலைமையை சமாளிக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.