கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: கனமழை பெய்ய வாய்ப்பு... வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று(செப்.,29) கனமழை பெய்யலாம்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26- முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

வடதமிழக மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.