கியூட் இளங்கலை தேர்வு முடிவுகள் .. தேசிய தேர்வு முகமை வெளியிட்டது

இந்தியா : நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

இதனை அடுத்து நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த ஜூலை மாதம் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை 6 கட்டங்களாக நடத்தியது. இந்தியாவில் 259 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 9 நகரங்களிலும் என 489 மையங்களில் கியூட் தேர்வு நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து 90 மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள 54 ஆயிரத்து 555 படிப்புகளில் சேர இந்த தேர்வை 9 லட்சத்து 68 ஆயிரத்து 201 பேர் எழுதினர். இந்நிலையில் கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் 'CUET UG 2022 முடிவுகள்' என்ற இணைப்பைக் கிளிக் செய்து விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கலாம். இதையடுத்து தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் தாங்கள் சேர விரும்பிய பல்கலைக்கழகங்களில் தொடர்புகொண்டு சேர்ந்துகொள்ளலாம் என்றும் தேர்வுமுகமை அறிவித்துள்ளது.