தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் அதிகளவில் மழை பெய்தது. கடலூர், சென்னை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

தமிழகத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். அந்தவகையில் நடப்பாண்டுக்கான வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 44.7 செ.மீ. மழை பதிவாகும். இது இயல்பான மழை அளவு ஆகும்.

அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் முதல் நேற்று வரை 45.23 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. தற்போது வரையில் தமிழகத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 41.97 செ.மீ. ஆகும். இது இயல்பை விட 8 சதவீதம் அதிகம்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு கிடைக்கும் இயல்பான மழை அளவை பருவமழை முடியும் முன்னரே தாண்டி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றும் மாநிலத்தின் பல இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.