நாகை மாவட்டத்தில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 428 ஆக உயர்வு

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 433 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து 8 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கப்பட்டதால் தொற்று எண்ணிக்கை 425 ஆக மாறியது.

இந்தநிலையில் நேற்று கீழ்வேளூர் அருகே வடுகச்சேரியை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை, கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் இருந்து நாகைக்கு காய்கறி ஏற்றிவரும் சிக்கலை சேர்ந்த 54 வயதுடைய வேன் டிரைவர் உள்பட 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 428 ஆக உயர்ந்தது.

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில் 280 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 147 பேர் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.