திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏழாயிரத்தை கடந்தது!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6,930 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 334 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டம் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், திருவள்ளூர், தேனி, மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6,930 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏழாயிரத்தை கடந்து 7,264 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 4,014 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை 129 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.