பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது- தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா

தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைய உள்ளதால் அதற்கு முன்பாக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. நேற்று சென்னை வந்த இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் தமிழகத்தில் தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பின் தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கையேடு வெளியிடப்பட்டது. பின்னர், 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொடர்பான தகவல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும், தேர்தலின் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவி பேட் தொடர்பான கையேடும் வெளியிடப்பட்டது.

இதன் பின் இந்திய தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா கூறியதாவது:- 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். 18 வயதான அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன் வர வேண்டும். தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதே இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை.

கொரோனா காலகட்டத்தில் பீகார் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். கொரோனா தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தேர்தல் நடத்துவது சவாலானது. தமிழகத்தில் தேர்தல் தேதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் தீவிரமாக கண்காணிக்கப்படும். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது.

உடல்நலக்குறைவு இருப்போருக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவிக்கப்படும், வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேருக்கு மேல் இல்லாதவாறு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.