மணிப்பூரில் மீண்டும் பதற்ற நிலையை உருவாக்கிய புகைப்படங்கள்

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் பதற்ற நிலை... மணிப்பூரில் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இனக்குழுக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை அடக்க மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்ந்து பதற்றமான பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மணிப்பூரில் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த புகைப்படங்கள் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த புகைப்படங்களில் உள்ள இரண்டு சடலங்களும் மெய்தி பழங்குடியினத்தைச் சேர்ந்த 17 மற்றும் 19 வயதுடைய மாணவர்கள் என்றும், அவர்கள் கடந்த ஜூலை மாதம் காணாமல் போனது தெரியவந்தது.

இந்த புகைப்படங்கள் மணிப்பூரை மீண்டும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளன. கொலை செய்யப்பட்ட மாணவர்களின் உடல்கள் எங்கு கிடக்கின்றன என்று தெரியாமல் போலீசார் தேடி வருகின்றனர். சடலங்களைக் கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.