லீனா மணிமேகலை குறித்த விசாரணை அறிக்கையை அளித்த போலீசார்

சென்னை: காழ்ப்புணர்ச்சி காரணத்தால் பதிவு... இயக்குனர் சுசிகணேசனால் உயிருக்கு ஆபத்து என்று முகநூல் மற்றும் டுவிட்டரில் பதிவிட்டு எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிவிட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் விசாரணை அறிக்கை அளித்துள்ளனர்.

லீனா மணிமேகலை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ந்தேதி கனடா செல்ல விமான நிலையம் சென்றிருந்த நிலையில், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக கூறி கனடா செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

தொட்ர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், லீனா மணிமேகலை தனது முக நூல் மற்றும் டுவிட்டரில், இயக்குனர் சுசிகணேசனுக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தன்னை மேற்படிப்பு தொடர்பாக கனடாவுக்கு செல்லவிடாமல் தடுத்துவிட்டதாகவும், தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு சுசிகணேசன் தான் காரணம் என்றும் கூறி இருந்தார்.

இதையடுத்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் லீனா மணிமேகலை இது போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சுசி கணேசன் , கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் லீனா மணிமேகலையை அழைத்து விசாரித்ததாக தெரிவித்துள்ள போலீசார், விசாரணை முடிவு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் சுசிகணேசன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக லீனா மணிமேகலை பொய்யான புகாரை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.