வரும் 20ம் தேதி பாராளுமன்ற முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி

பாராளுமன்ற முதலாவது கூட்டத் தொடர்... ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை மதியம் 3 மணிக்கு சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைக்க இருக்கின்றார்.

பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்த பின்னர், அக்கிராசனத்தில் இருந்து ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

இதேவேளை, பாராளுமன்றம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்குக் கூடும் என அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர். ஆதனைத் தொடர்ந்து அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிச்சத்தியம் செய்துகொள்வார்கள். பின்னர் சபாநாயகரால் பாராளுமன்றம் அன்றைய தினம் மதியம் 3 மணிவரை ஒத்திவைக்கப்படும்.

தொடர்ந்து மதியம் 3 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும். ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் அடுத்த அமர்வு வரை ஒத்திவைக்கப்படும்.