பூக்களின் விலை பல மடங்கு உயர்வு; மல்லிகைப்பூ கிலோ 1000 ரூபாயிக்கு விற்பனை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கியது. இதனால் கடந்த 4 மாதங்களாக பூக்களின் விலை கடுமையாக சரிவடைந்திருந்தது.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு சிறிய கோயில்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழில் நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியுள்ளதால் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.

இதனால் மக்கள் தாங்கள் வழக்கமாக கொண்டாடும் பண்டிகைகளை எளிமையாக வீடுகளிலேயே கொண்டாடத் தொடங்கியுள்ளனர். பண்டிகைகளில் முக்கியப்பங்கு வகிப்பவை பூக்கள் என்பதால் தற்போது அதன் தேவை அதிகரித்துள்ளது.

இருப்பினும் போக்குவரத்து சேவை இல்லாததால் வரத்து இல்லாமல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல் சந்தையில் கடந்த வாரம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ தற்போது 1000 ரூபாய் வரை விலை போகிறது. இதேபோல் முல்லையின் விலை 450 ஆகவும், சம்மங்கி, அரளி பூக்களின் விலை 150 ரூபாயாகவும் உள்ளது.