100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கிய ரெயில்வே துறை

இன்ப அதிர்ச்சி... 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு ரெயில்வே துறை ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மராட்டிய மாநிலம் புசாவல் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் நார்கர் பாபத். கடந்த 1951ஆம் ஆண்டு மத்திய ரெயில்வே, இந்திய பென்னின்சுலா ரெயில்வே ஆக இருந்தபோது பணியில் சேர்ந்தார். ரெயில்வே கார்டாக வேலை பார்த்த அவர், கடந்த 1978ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் அவர் கடந்த 21ம் தேதி 100 வயதை எட்டினார். வயதில் சதம் அடித்த மூத்த ஊழியரான அவரை மத்திய ரெயில்வே கவுரவிக்க விரும்பியது. இதையடுத்து மத்திய ரெயில்வே நிர்வாகம் அவரது ஓய்வு ஊதியத்தை இரட்டிப்பாக அதிகரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மேலும் அவரது 100வது பிறந்தநாளையொட்டி புசாவல் கோட்ட மேலாளர் விகாஸ் குமார் மற்றும் அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று அவருக்கு பூங்கொத்து, இனிப்பு மற்றும் வாழ்த்து கடிதங்களைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

100 வயதான கேசவ் நார்கர் பாபத் முதலில் ராணுவத்தில் பணியாற்றினார். பின்னர் அதில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று ரெயில்வேயில் பணிக்குச் சேர்ந்து உள்ளார். அவர் இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்று இருந்ததாகவும், போருக்காக பல நாடுகளுக்குப் பயணம் செய்ததாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.