19 மாநிலங்களில் கொரோனாவுக்கு குணமடைந்தவர்கள் விகிதம் தேசிய அளவிலான சராசரியை விட அதிகம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 18 ஆயிரத்து 850 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 53 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. இது, 63.02 சதவீதம் ஆகும்.

இந்நிலையில் 19 மாநிலங்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் தேசிய அளவிலான சராசரியை விட அதிகமாக உள்ளது. அதில், லடாக்கில் குணமடைந்தவர்கள் விகிதம் 85.45 சதவீதமாகவும், டெல்லியில் 79.98 சதவீதமாகவும், உத்தரகாண்டில் 78.77 சதவீதமாகவும், சத்தீஸ்காரில் 77.68 சதவீதமாகவும், இமாசலபிரதேசத்தில் 76.59 சதவீதமாகவும் உள்ளது.

நாடு முழுவதும் 3 லட்சத்து ஆயிரத்து 609 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாடு முழுவதும் மொத்தம் ஒரு கோடியே 18 லட்சத்து 6 ஆயிரத்து 256 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் விகிதம் 2.64 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த தேசிய சராசரியை விட 30 மாநிலங்களில் கொரோனாவுக்கு பலியானோர் விகிதம் குறைவாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நோய் தடுப்பு நடவடிக்கைகளும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் அதிகமாக காரணமாக அமைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.