மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை; அமைச்சர் தகவல்

சென்னை: ரத்து செய்யப்படவில்லை... அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. அதிகாரிகளிடம் விவாதித்ததில் லேப்டாப் தான் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் டேப் வழங்கும் திட்டத்திற்கு பதிலாக லேப்டாப்பே தொடர்ந்து வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்களின் பிரார்த்தனையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார். குலக்கல்வியை எதிர்த்ததால் தான் காமராஜர் முதலமைச்சரானார். பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதற்கான அடித்தளமிட்டு, கல்வியில் தனிக் கவனம் செலுத்தியவர் காமராஜர் என்று குறிப்பிட்டார்.

NEP என்றால் No Education Policy என்று பேசிய அமைச்சர், எனவே தான் State Education Policy -ஐ மாநில அரசு வடிவமைத்து வருவகிறது. நமக்கான கல்வியை நாமே உருவாக்கிக்கொள்வோம் என்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைந்து வீடு திரும்பிய உடன் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் ஆகியவற்றை துவக்கி வைப்பார். அவருடைய உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருந்து வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார். அரசுப் பள்ளிகளில் லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை.

அரசு பள்ளிகளில் மீண்டும் லேப்டாப் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் Tab வழங்குவோம் என்று கூறியிருந்த நிலையில், அதிகாரிகளிடம் விவாதித்ததில் லேப்டாப் தான் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் டேப் வழங்கும் திட்டத்திற்கு பதிலாக லேப்டாப்பே தொடர்ந்து வழங்கப்படும்

கொரோனா பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களுக்காக கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப்புகள் மாநிலம் முழுவதும் வழங்கப்படாத நிலையில், தற்போது 11 லட்சம் லேப்டாப்புகள் வழங்க வேண்டிய நிலை உள்ளது. அவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

TET தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர கூடுதலாக ஒரு தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை எண் 149-ஐ ரத்து செய்வது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். அரசுப்பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் எப்படி உடை அணிய வேண்டும்? கைகளில் சாதிக் கயிறு, டாட்டூ போட்டுக் கொள்ளக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளது என தெரிவித்துள்ளார்.