சென்னையில் தளர்வுகளுக்கு பிறகு கொரோனா பரவுவதும் அதிகரிக்கவில்லை

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது தொற்று பரவல் குறைந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்தும் தொடங்கி உள்ளது. தளர்வுகள் மற்றும் பொது போக்குவரத்து காரணமாக கொரோனா அதிகரிக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் தளர்வுகளுக்கு பிறகு கொரோனா எந்த அளவு பரவுகிறது என்பதையும் அதிகாரிகள் கணக்கிட்டு வந்தனர். இதில் கொரோனா பரவுவது எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம் 50 சதவீத மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இருந்தாலும், இன்னும் 28 நாட்களுக்கு பிறகுதான் முழுமையான தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியவரும் என்கிறார்கள் அதிகாரிகள்.

இப்போது வணிகப் பகுதிகளில் கூட்டம் அதிகரித்து உள்ளது. ஆனால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. வீடுகளில் நடத்தி வரும் பரிசோதனையில் தளர்வுகளுக்கு பிறகு அடுத்தடுத்த வீடுகளுக்கு கொரோனா பரவுவதும் அதிகரிக்கவில்லை.

சென்னையில் 10 மண்டலங்களில் கொரோனா தொற்று இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே நேரம் 5 மண்டலங்களில் நோய் தொற்று எண்ணிக்கை சிறிது அதிகரித்து உள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் மட்டும் 1,100 வீடுகளில் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. கடந்த 7 நாட்களில் இந்த மண்டலத்தில் 0.5 சதவீதம் நோய் தொற்று அதிகரித்து உள்ளது. ஆனால் மணலி மண்டலத்தில் நோய் தொற்று மிகவும் குறைந்து வருகிறது.