உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை கொண்டு வந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பட்டினி சாவு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவுவதற்கு முன்னே உலகம் முழுவதும் 35.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது 6 குழந்தைகளில் ஒருவர் இந்த அவலத்தில் இருந்ததாகவும், தற்போதைய பொருளாதார சிக்கலால் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்திருப்பதாகவும் ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்பும், உலக வங்கியும் அதிர்ச்சித்தகவல் வெளியிட்டுள்ளன. இந்த வறுமையை ஒழிக்க சர்வதேச அளவில் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் எனவும் அவை எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து யுனிசெப் திட்ட இயக்குனர் சஞ்சய் விஜேசேகரா கூறுகையில், உலக அளவில் 6-ல் ஒரு குழந்தை கொடிய வறுமையில் இருக்கிறது என்றால், அது வாழ்வதற்கே போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இந்த எண்ணிக்கை மட்டுமே யாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். இந்த எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்னும் மோசமாகுவதற்கு முன்பே நாடுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உலக அளவில் கொடிய வறுமையில் தள்ளப்பட்டு உள்ளவர்களில் 50 சதவீதம் பேர் குழந்தைகள் எனக் கூறியுள்ள உலக வங்கி நிர்வாகி கரோலினா சாஞ்சஸ், கொரோனாவுக்கு முன்னரே இந்த எண்ணிக்கை அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தி இருந்தது என தெரிவித்துள்ளார்.