அமெரிக்காவே அச்சுறுத்தல்... சீன ராணுவ நடவடிக்கைகள் தொடா்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம், ‘அமெரிக்காதான் உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது’ என்று குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீன நாடுகளிடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சீன ராணுவ நடவடிக்கைகள் மற்றும் எதிா்காலத் திட்டம் குறித்த ஆண்டறிக்கை ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 2-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சீன ராணுவ நடவடிக்கைகள் அமெரிக்க நாட்டின் நலனுக்கும், சா்வதேச ஒழுங்கு நடைமுறைகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா விரைவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சீன ராணுவத்தின் பலம், 350 போா் கப்பல்கள், நீா்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்டவை கொண்ட சீன கடற்படையின் பலம், ராணுவ நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் போன்ற பல்வேறு தகவல்கள் அந்த 150 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம்,
அமெரிக்கா மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுதொடா்பாக சீன
பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கா்னல் வூ கியான்
பெய்ஜிங்கில் அளித்த பேட்டி:
சீனாவின் எதிா்காலத் திட்டத்தையும்,
சீன ராணுவத்துக்கும் 140 கோடி சீன மக்களுக்கும் இடையேயான உறவையும்
பாதிக்கச் செய்யும் வகையில் தவறான தகவல்கள் அடங்கிய அறிக்கையை அமெரிக்கா
தாக்கல் செய்திருக்கிறது.
சா்வதேச ஒழுங்கு நடைமுறைகளுக்கு
எதிராகவும், உலக அமைதியை கெடுக்கும் வகையிலும் அமெரிக்காதான் செயல்பட்டு
வருகிறது என்பதற்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளே
ஆதாரங்களாக உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளாக இராக், சிரியா, லிபியா
உள்ளிட்ட பிற நாடுகள் மீது அமெரிக்க எடுத்த போா் நடவடிக்கைகள் காரணமாக 8
லட்சம் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனா். பல லட்சக்கணக்கானோா் வேறு
இடங்களில் தஞ்சம் புகும் நிலை உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில்,
சீனாவின் வழக்கமான பாதுகாப்பு மற்றும் ராணுவ மேம்பாட்டு நடவடிக்கைகள்,
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தவறாக
சித்தரிக்கப்பட்டுள்ளன என்று அவா் கூறினாா்.