புனே: சர்ச்சையை ஏற்படுத்தி சம்பவம்... நெற்றியில் பொட்டு வைக்காததால் பெண் பத்திரிகையாளருக்கு சமூக ஆர்வலர் ஒருவர் பேட்டியளிக்க மறுத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமூகநல செயற்பட்டாளர் சம்பாஜி பிடே. இவர் நேற்று தெற்கு மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்திக்க வந்தார். முதல்வருடனான சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அவரிடம் பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் நின்றிருந்தனர்.
அப்போது சம்பாஜி பிடேயிடம் ஒரு பெண் பத்திரிகையாளர் கேள்வி
எழுப்பினார். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் நின்றிருந்த சம்பாஜி திடீரென
அந்தப் பெண் பத்திரிகையாளரை நோக்கி, “நான் உங்களிடம் பேச விரும்பவில்லை.
ஒரு
இந்தியப் பெண் பாரத மாதாவிற்கு சமமானவர். அவர் ஒரு விதவையைப் போல் வெறும்
நெற்றியுடன் இருக்கக் கூடாது” என்றார். இது அங்கிருந்த அனைவரையும்
அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான
நிலையில் மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் தலைவர் ரூபாலி சக்கன்கர்
பிடேவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிடே
இது போன்ற சர்ச்சைக் கருத்துகளைப் பேசுவது இது முதன்முறையல்ல. இதற்கு
முன்னர் 2018ல் பிடே, தனது தோட்டத்துக்கு மாங்கனிகளை சாப்பிடும் தம்பதிக்கு
ஆண் குழந்தை மட்டுமே பிறக்கும் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.