குரங்கம்மை நோய் குறித்து அவசர கூட்டம் நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு

நியூயார்க்: அவசர கூட்டம் நடத்த முடிவு... உலக நாடுகளில் தற்போது தீவிரமாக பரவி வரும் குரங்கு அம்மை நோய் தொற்று தொடர்பில் அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், குரங்கு நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது.

இதன் பாதிப்பு சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையை பிரதிபலிக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் அவசர கமிட்டியை கூட்ட முடிவு செய்துள்ளேன் என்றார்.