தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் சென்னை உள்பட தமிழகத்தில் சில இடங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி தொடங்கியது. இதனால் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மழை பரவலாக கொட்டி தீர்த்தது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

எனவே இதன் காரணமாக தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது, தமிழகத்தில் இந்த பருவமழை காலத்தில் இது 3-வது மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் பட்சத்தில் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் சென்னை உள்பட தமிழகத்தில் சில இடங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான சூழல் இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு மையம் கவனித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.