ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நடக்கவில்லை

கொழும்பு: போட்டி பரீட்சை இல்லை... ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை இன்று இடம்பெறவில்லை.

குறித்த போட்டிப் பரீட்சை இன்று நடத்தப்படவிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில், இந்த பரீட்சை இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறவுள்ள உயர்நீதிமன்றின் தீர்மானத்தின் பிரகாரம் குறித்த பரீட்சை மீண்டும் நடத்தப்படும் திகதியை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு செய்யப்படும் வரை போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்தே, குறித்த போட்டிப் பரீட்சை இன்றைய தினம் இடம்பெறவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.