கோயம்பேட்டில் இந்தாண்டு ஆயுதபூஜை சிறப்பு சந்தை இல்லை

இந்தாண்டு சிறப்பு சந்தை இல்லை என்று கோயம்பேடு நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, பொங்கல், ஆயுதபூஜை போன்ற பண்டிகை காலங்களில் கோயம்பேடு சந்தையில், சிறப்பு சந்தை அமைக்கப்படுவது வழக்கம். அதாவது, பூஜை பொருட்கள், கடலை, கரும்பு, பூசணிக்காய், நாட்டுச் சர்க்கரை, மஞ்சள் கொத்து, மாவிலை தோரணங்கள், வாழைக் கன்றுகள், பழ வகைகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும்.

ஆண்டுதோறும் கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில், அதன் வளாகத்தில் சிறப்பு சந்தை அமைக்கப்படும். ஆனால் இந்தாண்டு ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, தற்போது காய்கறி சந்தை மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

அதிலும் மொத்தமுள்ள சுமார் 2 ஆயிரம் கடைகளில் 200 கடைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது காய்கறி சந்தை திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஆயுதபூஜை சிறப்புச் சந்தை திறக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என இப்போது கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தை கட்டுப்படுத்தவே கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன. தற்போது காய்கறி சந்தைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற சந்தைகள் திறக்கப்படவில்லை.

எனவே கொரோனா பரவலை தடுக்க, கோயம்பேடு சந்தையிலோ, பிற பகுதியிலே ஆயுதபூஜை சிறப்பு சந்தை திறக்கப்படாது என கோயம்பேடு சந்தை நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.